தேர்தல் ஆணையம் இடம் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் பழைய பதவியில் நியமித்த அரசு
சென்னை: தேர்தலின்போது இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மீண்டும் பழைய பதவிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பழைய பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அப்போது தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது மீண்டும் பழைய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,
"தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் கே.மகரபூஷணம், சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தொழில்துறை துணைச்செயலாளர் ஆர்.நந்தகோபால், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் வி.கே.சண்முகம், ஈரோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்படுகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் ஹனீஷ் சாப்ரா, தொழில்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்படுகிறார்.
தொழில்துறை இணைச்செயலாளர் ஜெ.குமரகுருபரன் , தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்படுகிறார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன், சர்க்கரை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications