ஆட்சியை நான் கவிழ்க்க வேண்டாம்... அது தானாக கவிழும் - ஸ்டாலின்
அதிமுக ஆட்சியை நான் கவிழ்க்க முயற்சிக்கவில்லை. அது தானாகவே கவிழும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார், அந்த வேலையை நான் செய்யவில்லை, ஆனால் ஆட்சி தானாகவே கவிழும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நிரந்தரமான ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டார். ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அது போன்ற முயற்சியில் தான் துளியும் ஈடுபடவில்லை ஆனால் தமிழகத்தில் தானாகவே ஆட்சிக் கவிழும் சூழல் உள்ளது.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக போட்டா போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுகவினர் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.
மகாத்மா காந்தி பற்றி சர்ச்சை கருத்து கூறிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தார். அமித்ஷாவின் பொறுப்பற்ற பேச்சு வேதனை அளிக்கிறது.
அரிசி, பால் உள்ளிட்ட கலப்படங்களை தடுக்க ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.