அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது!
ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை குண்டு கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு : ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடையை மீறியும், அரசு எச்சரிக்கைக்கு சட்டை செய்யாமலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், பாய் தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வர மறுத்த ஊழியர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். பல ஊழியர்களுக்கு காவல்துறையினரை கண்டித்து முழக்கமிட்டனர்.
விழுப்புரத்தில் கைது
விழுப்புரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக கைது செய்யும் காவல்துறையினரைக் கண்டித்து ஊழியர்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications