சாதிய வன்கொடுமையில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
சாதிய வன்கொடுமையில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளதாக தாழ்த்தப்பட்ட ஆணைய துணைத் தலைவர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை: இந்திய அளவில் தமிழகம் சாதிய வன்கொடுமையில் 5வது இடத்தில் உள்ளதாக தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் வேதனையான தகவலை வெளியிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகள், அரசின் நிதி உதவிகள் வழங்குதல் குறித்த கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. அதில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விதிமுறைகள் பற்றி சட்ட விளக்கம் கொடுத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது போல் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சமூக, பொருளாதார உதவிகள் முறையாக கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் முறையாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பது குறித்து அதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
பலரிடம் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்டோர்களுக்கு வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வன்கொடுமையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது. அதே சமயம் போதிய விழிப்புணர்வு உள்ளதால் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்துதான் அதிக புகார்கள் வருகிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
கடந்த மாதம் 3 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் வன்கொடுமை வழக்குகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. 95 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தற்போது முடங்கியுள்ளது. ஆணையம் சார்பில் நடைபெறும் மாநில கூட்டத்தில் இது தொடர்பாக எடுத்துரைப்போம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications