காந்திய மக்கள் கட்சி உதயம்: தலைவராக தமிழருவி மணியன் தேர்வு!
மதுரை: காந்திய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதன் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
தமிழருவி மணியன் தொடங்கிய காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களின் ஏகோபித்த ஆதரவினால் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி இக்கட்சியின் தலைவராக தமிழருவி மணியனும், துணைத்தலைவராக ஒ.கெ.எஸ்.கந்தசாமியும், பொதுச்செயலாளராக வழக்கறிஞர் கணேசனும், துணை பொதுச் செயலாளராக கிருஷ்ணமூர்த்தியும், பொருளாளராக குமரய்யாவும், மாநிலச் செயலாளர்களாக இனியன் ஜான், வழக்கறிஞர் தங்கவேல், கோவை தங்கவேல் ஆகியோரும், இளைஞரணி செய்லாளராக ரஞ்சனும், இலக்கிய அணி செயலாளராக சுப்ரமணிய பாரதியும், மாணவரணி செயலாளராக லட்சுமி நரசிம்மனும் அறிவிக்கப்பட்டனர்.
காந்திய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை இன்று மதியம் தமிழருவி மணியன் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, ‘‘இன்னும் பத்து வருடகாலத்திற்குள் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை எங்களுடைய காந்திய மக்கள் கட்சி பிடிக்கும். அதுவரைக்கும் வைகோவை முதல்வராக்க வேலை செய்வோம்.
மத்தியில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிவதற்காகத்தான் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம். எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. நான் ஒரு பெரியார் கொள்கைவாதி. எனக்கு சாதி, மதம் இல்லை. பா.ஜ.க. தன்னுடைய இந்து நலன் என்ற கொள்கையிலிருந்து இந்தியர் நலன் என்ற அடிப்படையில் வரவேண்டும்.
ராமதாசும் தன்னுடைய வன்னியர் சாதியை தூக்கிபிடிப்பதிலிருந்து அனைத்து தமிழர்களுக்குமானவராக மாற வேன்டும். எச்.ராஜா பெரியாரைப்பற்றி அவதூறாக பேசியது உண்மையாக இருந்தால், அவர் இந்த மண்ணில் வாழவே தகுதியில்லாதவர், அவரைப்பற்றி போலீசில் புகார் கொடுத்தவர்களை பாராட்டுகிறேன்'' என்றார்.