2016ல் ரஜினி பாஜகவின் முதல்வர் வேட்பாளரா?: தமிழிசை சவுந்தர்ராஜன் மறுப்பு
சென்னை: 2016 ஆம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினியை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக வெளியான செய்தி அதிகாரப்பூர்வமற்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேசமயம் ரஜினிகாந்தை பாஜக-வில் இணைய வரவேற்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக-வின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி சென்றுள்ளார். அங்கே செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அதிகாரப்பூர்வமற்ற செய்தி
அப்போது, ரஜினிகாந்தை பாஜகவில் இணைத்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், "அது ஒரு செய்தியே, ஊடகங்களில் வந்த அதிகாரபூர்வமற்ற செய்தியாகும். கட்சியிலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ செய்தி அல்ல" என்று கூறினார்.

மோடியுடன் சந்திப்பு
அவர் மேலும் , "ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜகவின் நன்மதிப்பு பெற்றவர். நம் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை நேரில் சந்தித்துள்ளார்" என்றார்.

அன்புடன் அழைக்கிறோம்
ரஜினிகாந்த் விவகாரம் பற்றி அவர் மேலும் கூறியபோது, "நதிகள் இணைப்புத் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தபோது, ரஜினிகாந்த் ரூ.1 கோடி அளிப்பதாக உடனடியாக அறிவித்தார். அவர் தேசியப் பார்வை உள்ள ஒரு நடிகர். எனவே அவரை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்" என்று கூறினார்.

அமித்ஷாவின் வருகை
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வரவிருக்கும் மிக முக்கியமான தேர்தலாகும் அது. அதற்கான தீவிர திட்டமிடுதல் அவசியம். இதற்காக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

பாஜகவின் வெற்றி
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறச்செய்வதே கட்சியின் முதன்மை இலக்கு" என்றார் அவர்.அதே போல் இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் கட்சியின் எதிர்காலத் திட்டங்களில் மிக முக்கியமானது என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications