வன்முறைகளை தடுக்க தவறிய சித்தராமைய்யா உடனடியாக பதவி விலக வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்
சென்னை: தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி பிரச்சினையொட்டி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், லாரிகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்சிருப்பது உச்சகட்ட அராஜகம். இதுபோன்ற வன்முறைகளை கர்நாடக காவல் துறையினர் தடுக்க முயன்றதாகவே தெரியவில்லை. கர்நாடக அரசின் செயலற்ற தன்மையையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.
கர்நாடகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் கூறிய பிறகே ஓரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், பற்றி எரியும் இப்பிரச்சினை குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் எவ்வித கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை தடுக்கத் தவறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
தமிழர்களைத் தூண்டுவிடும் தேசவிரோத சக்திகளின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது. வன்முறைக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுத்து விடக் கூடாது'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications