டிவி, மிக்சி வேண்டாம்... அமவுண்டாக அள்ளி விடவும்: வாக்காளர்களின் வேண்டுகோள்
சென்னை: ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் ஒரு வருடம் ஜெயில் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தாலும் அதைப்பற்றி எல்லாம் திருவாளர் வாக்காளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 'பரிசுப் பொருளாக வேண்டாம் பணமாக தாங்க பாஸ்' என்கிற ரீதியில் வேண்டுகோள் வைத்துள்ளனர் வம்பான வாக்காளர்கள். வேட்பாளர்களுக்கு அவர்கள் வைத்துள்ள வேண்டுகோள் தற்போது வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தலை நய்யாண்டி செய்து நூதன விளம்பரங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் தற்போது திருமண அழைப்பிதழ் வடிவத்தில் 'தேர்தல் அழைப்பிதழ்'வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் அழைப்பிதழ் என்ற தலைப்பின் கீழ், 'அன்புடையீர், நிகழும் மட்டகரமான ஆண்டு மே திங்கள் 16ம்நாள், தேர்தல் ஆணையத்தின் தலைமையில் தேர்தல் நடைபெற இருப்பதாய் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் முன்னதாகவே வந்து வாக்குப்பிச்சை கேட்குமாறு செம கடுப்பில் அழைக்கிறோம்'.
இலவச பிச்சை எடுப்போர் திருந்தாத பொதுமக்கள். வாக்குப்பிச்சை எடுப்போர் அலிபாபாவும் அம்புட்டு திருடர்களும். இது சமயம் அனைத்துக் கட்சி அல்லக்கைகளும் தேர்தல் கெடுபிடி இருப்பதால் எச்சரிக்கையாக எல்லா ஏரியாக்களுக்கும் வந்து இலவச பிச்சை இடுமாறு வாயை பிளந்து கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: கொலுசு, டிவி, மிக்சி போன்ற பொருட்களாக வழங்குவதை தவிர்க்கவும். அமவுண்டாக மட்டுமே அள்ளிவிடவும். தங்கள் வருகைக்கு நன்றி. இது போல அடிக்கடி தேர்தல் நடத்தவும்'' என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என்று அனைத்து தரப்பையும் நய்யாண்டி செய்து வலம் வந்து கொண்டிருக்கும் இந்த 'தேர்தல் அழைப்பிதழ்' தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.