மோடி-ஜெயலலிதா சந்திப்பை விமர்சித்த இளங்கோவனுக்கு எதிராக பாஜக நாளை போராட்டம்
சென்னை: பிரதமர் நரேந்திரமோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக்கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெசவாளர் தின நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டம் இல்லத்தில் சந்தித்து பேசி, மதிய உணவு சாப்பிட்டு சென்றார். அப்போது, தமிழக நலன் சார்ந்த ஒரு கோரிக்கை மனுவையும், மோடியிடம், ஜெயலலிதா அளித்தார்.

முதல்வர் வீட்டுக்கே மோடி சென்றிருக்க கூடாது என்று, இந்த சந்திப்பை பல எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த சந்திப்பு குறித்து, அச்சில் ஏற்ற முடியாத, சில அநாகரீக வார்த்தைகளை தெரிவித்தார்.
இதைக் கண்டித்து, அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்திவருகின்றனர். சத்தியமூர்த்தி பவனிலும் போராட்டம் நடத்தி இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இளங்கோவனுக்கு எதிராக தமிழக பாஜக களத்தில் குதித்துள்ளது.
இதுவரை அதிமுக மட்டுமே போராடிவந்த நிலையில், அதற்கு கைகொடுத்துள்ளது பாஜக. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை இன்று நிருபர்களிடம் கூறுகையில், "நரேந்திரமோடி-ஜெயலலிதா சந்திப்பு, தமிழக நலன் சார்ந்தது. அந்த சந்திப்பை இளங்கோவன் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. எனவே, இளங்கோவனை கண்டித்து, நாளை புதன்கிழமை, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக போராட்டம் நடத்தும்" என்றார்.












Click it and Unblock the Notifications