டெல்லியில் நாளை பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை சந்திக்க உள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமையன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் மக்கள் பிரச்சினைக்காக சந்திப்பு என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம். இது எதிர் அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளதால் அவர் டெல்லி திரும்பிய பின்னர் புதன்கிழமையன்று பிரதமரை சந்திப்பார் என்று தெரிகிறது.
இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் தமிழக பிரச்சினை குறித்தும், அழுத்தம் கொடுக்கவே இந்த சந்திப்பு என்று கூறினாலும் ஓபிஎஸ் அணியினருக்கு மத்திய அரசு உடனான நெருக்கத்தை தெரியபடுத்தவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சில வாரங்களில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார். இப்போது மீண்டும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். மத்திய அரசுடன் நாங்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே விரைவில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் என்று தெரிகிறது.