மக்களை ஏமாற்றி தினகரன் மாயாஜால வெற்றி பெற்றுள்ளார்... எடப்பாடியார் பாய்ச்சல்
ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் பெற்றது வெற்றியே அல்ல, மக்களை ஏமாற்றி மாயாஜால வெற்றி பெற்றுள்ளார் அவர் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : சென்னை ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் பெற்றது வெற்றியே அல்ல, மக்களை ஏமாற்றி மாயாஜால வெற்றி பெற்றுள்ளார் அவர் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவிற்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்த திமுகவிற்கு டெபாசிட்டே போய்விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது : தினகரனும், ஸ்டாலினும் உடன்படுக்கை செய்து கொண்டு எங்களை தோற்கடிக்கத் திட்டமிட்டனர். இது தோல்வியே அல்ல, இந்த தேர்தலே ஒரு வித்தியாசமான தேர்தலாக நடந்துள்ளது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் அல்ல, மக்களை ஏமாற்றிப் பெற்ற மாயாஜால வெற்றி.

ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எப்போதுமே அதிமுக தேர்தலை சந்தித்தது கிடையாது. அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவிற்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்ததால் திமுக 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளது.
இந்த ஆட்சி நடக்கவே நடக்காது, பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் ஆட்சி கவிழும் என்றார்கள். 6 மாதத்தில் ஆட்சி கவிழும் என்றார்கள், இப்போது 11 மாதங்களைக் கடந்து ஆட்சி நல்ல முறையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications