ஐபிஎல்... வெறும் "கண்"ணோடு வாங்க.. கொடி, பேனர்கள் கூடவே கூடாது.. ரசிகர்களுக்கு தடா!
Recommended Video
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பேனர்கள், கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தமிழக கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடே கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை நிறுத்தக் கோரி பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும் அதை கிரிக்கெட் சங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
கிரிக்கெட் சங்கம் தடை
மாறாக திட்டமிட்ட தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளை காண மைதானத்துக்கு செல்லும் ரசிகர்கள், செல்போன், தண்ணீர் பாட்டில், கொடி, பதாகைகள், பீடி, சிகரெட், கண்ணாடிகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது என்று கிரிக்கெட் சங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் புகார் கொடுக்கலாம்
மேலும் இசைக்கருவிகள், கார் சாவி, பைனாகுலர், பட்டாசுகள், கேமரா, ரேடியோ, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படுபவர்கள் மைதானத்தில் இருந்தால் அவர்களை பற்றி ரசிகர்கள் புகார் கொடுக்கலாம் என்றும் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
போலீஸில் ஒப்படைப்பு
கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் பல்வேறு சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். மைதானத்தில் எந்த பொருளையாவது வீசினால் அவர்கள் போலீஸில் ஒப்படைக்கப்படுவர்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் போட்டிகளை நடக்கவிடாமல் தடுப்போம் என்று அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.