தமிழகத்தில் வறட்சி இல்லையாம்.. மத்திய அரசு அறிவிப்பை மறுக்கிறதா தமிழக அரசு?
சென்னை: தமிழகம் உட்பட மொத்த தென் இந்தியாவும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்ட நிலையில், தமிழக அரசோ அப்படி இல்லை என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களோடு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநிலங்களுக்கு தலா ரூ.24000 கோடியை வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியது மத்திய அரசு. 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் இம்மாநில மக்களுக்கு கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த மாநிலங்களுக்கு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட நாட்களை 150 என அதிகரிக்க திட்டமிட்டது.
இப்படி மத்திய அரசே அறிவித்த நிலையில், இன்று தமிழக அரசோ, தமிழகம் முழுமையாக வறட்சியால் பாதிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் முழுவறட்சி இல்லை என்று கூறியுள்ளது.
அரசே இவ்வாறு கூறியுள்ளதால், விவசாய கடனை ரத்து செய்யுமாறும், வறட்சி நிவாரண நிதியை உயர்த்தி தருமாறும் மத்திய அரசிடம் தமிழக அரசால் இனி வலிமையாக கோரிக்கை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
(தமிழகம் உள்பட மொத்த தென் இந்தியாவும் வறட்சியால் பாதிப்பு.. அறிவித்தது மத்திய அரசு)