எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குப் பயப்படுகிறார்... திருநாவுக்கரசர் தாக்கு: வீடியோ
மத்திய அரசைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால்தான் அவர் மாட்டுறைச்சி தடைக்கு எந்த கருத்தையும் கூறாமல் உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ள
சென்னை: மத்திய அரசைப் பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி பயப்படுகிறார். அதனால்தான் மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் எந்தக் கருத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி போன்றோர் எதிர்த்து கருத்து கூறியுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து எதுவும் கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூட, மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ''புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட சில மாநில அரசுகள் இந்த தடையை எதிர்த்து கருத்துக் கூறியுள்ளனர். ஆனால், தமிழக அரசு வழக்கம்போல் மத்திய அரசுக்கு பயந்துகொண்டு எந்தக் கருத்தையும் கூறவில்லை. அது கண்டிக்கத்தக்கது. புதுவையைப் போல், மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க மாட்டோம் என தமிழக அரசு கூற வேண்டும்.
மேலும், மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் வாங்கவும் விதித்துள்ள தடையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ஆர்.எஸ்.எஸ் இடும் கட்டளைகளை நிர்பந்தங்களின் காரணமாக மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. காரணம் மோடியும் ஒரு ஆர்.எஸ்.எஸ் சேவகர் தான்'' என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.