காவிரி மேலாண்மை வாரியம்.. சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி தீர்மானம்.. தமிழக அரசு திட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில், பிப்ரவரி 16ல், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், கர்நாடக அரசோ அதுபோல உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தது. இதுதொடர்பாக, சமீபத்தில், மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பதுதான் என தமிழக அரசு சில தினங்கள் முன்பு விளக்கம் கொடுத்தது. இந்த குழப்பங்களுக்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதிடாததுதான் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், வரும் 15ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், அன்று மாலையே மீண்டும் அவையை கூட்டி சிறப்பு கூட்டம் நடத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்றைய தினம் சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்தவில்லை எனில், 16ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications