குறைந்த விலையில் மணல் விற்க ஆப்.. முறைகேடுகளுக்கு அரசின் செயலி வைக்குமா ஆப்பு?
குறைந்த விலையில் மணல் தங்குதடையின்றி கிடைக்கும் வகையல் தமிழக அரசு சார்பில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மணல் விற்கனையை தங்குதடையின்றி நடத்த அரசு சார்பில் தமிழ்நாடு மணல் இணைய சேவையை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
உபயோகிப்பாளர்களுக்கு மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூறிவருகிறது. அவற்றில் ஒன்றாக, தற்போது இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம். மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

திட்டம் துவக்கம்
பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். மேலும் www.tnsand.in என்ற இணையதளத்தையும் மொபைல் செயலியையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

ஜூலை 1 முதல்
"தமிழ்நாடு மணல் இணைய சேவை" ஜூலை 1ம் தேதி முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

வரவேற்பு இருக்குமா?
உபயோகிப்பாளர்களுக்கு மணல் தேவையை பூர்த்தி செய்வதுடன், மணல் தங்குதடையின்றி குறைவான விலையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மணல் லாரி உரிமையாளர்களின் வரவேற்பு எந்த அளவில் இருக்கும் என்று தெரியவில்லை.

செயற்கை தட்டுப்பாடு நீங்குமா?
எனினும் அவ்வபோது செயற்கையான மணல் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு விண்ணை முட்டும் விலை விற்கப்படும் நிலை தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணல் விற்பனையை டிஜிட்டல் முறையில் கொண்டு வந்திருப்பது நல்ல முயற்சியாக இருந்தாலும் இதன் சாதக பாதகங்கள் செயல்பாட்டிற்கு வந்தாலே தெரிய வரும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications