சில மாவட்டங்களில் தளர்வு.. மற்ற இடங்களில் "ஸ்டிரிக்ட்" லாக்டவுன்.. தமிழ்நாடு அரசு பிளான்?.. பின்னணி
சென்னை; தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் வரும் நாட்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தற்போது தமிழகத்தில் 296131 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.
24722 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகி உள்ள நிலையில், 18,02,176 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
லாக்டவுன்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தீவிர லாக்டவுன் அமலில் உள்ளது. கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புதிய லாக்டவுன் அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.
நீட்டிப்பு
இந்த ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும், ஆனால் சில தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
தளர்வுகள்
அதன்படி தமிழகம் முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படும், அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்கிறார்கள். அதாவது 10 மணி வரை வெளியே செல்லலாம், அத்திவாசியா பொருட்களுக்கான கடைகள் இயங்கலாம் உள்ளிட்ட சில தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.
மேற்கு
இது போக கொரோனா கேஸ்கள் இன்னும் குறையாமல் இருக்கும் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடும் கட்டுப்பாட்டோடு லாக்டவுன் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக மேற்கு மாவட்டங்களில் இந்த கடும் கட்டுப்பாடுகளோடு லாக்டவுன் தொடரும். இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் கேஸ்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தொடரும்
இதனால் அங்கு கட்டுப்பாடு தொடரும் என்கிறார்கள். லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துஇருந்தார். இந்த நிலையில்தான் முதல்கட்டமாக கேஸ்கள் குறைந்த மாவட்டங்களி மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.