ஜெராக்ஸ் மிஷின் கூட இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்திடம் ஜெராக்ஸ் மிஷின் கூட இல்லையா ? எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராம்மோகன்ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜரானார்.
அப்போது வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என்று எண்ணுவதை விட, வேறு எதையும் செய்ய தேர்தல் ஆணையம் முன்வரவில்லை என்றும், வழக்கிற்கு மாநில தேர்தல் ஆணையம் போதிய ஒத்துழைப்பு தரவில்லை எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் தேர்தல் ஆணைத்திடம், ஜெராக்ஸ் மிஷின் கூட இல்லையா? எனவும் ஆவணங்களை ஒவ்வொன்றாக தருகிறீர்களே. எத்தனை முறை தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் அளிப்பது என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதில், பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை முறையாக பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.