மதுவிலக்கு போராட்டத்தில் தேர்தலுக்கு அச்சாரம்.. உருவாகிறது புதிய கூட்டணி! திமுக, பாமகவுக்கு கல்தா
சென்னை: மது விலக்கு போராட்டங்களை முன்னெடுப்பதிலேயே வரும் பொதுத்தேர்தலுக்கான கூட்டணி உடன்பாடுகள் மறைமுகமாக நடந்துவருவதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தோர். மது விலக்கு போராட்டங்களிலும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளே ஒன்றிணைந்து போராடுவதையும், என்னதான் பெரிய கட்சிகளாக இருந்தாலும், திமுக மற்றும் பாமக தனித்துவிடப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் அதற்கான முஷ்திபுகளில் இறங்கியுள்ளன.

பாஜக-அதிமுக
அதிமுகவை பொறுத்தளவில், பாஜக கூட்டணியுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நரேந்திரமோடி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக உயர்மட்ட தலைவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருப்பதால், அவர்கள் இணைந்தே களம் காண திட்டமிட்டுள்ளனர்.

திமுகவுக்கு தேவை கூட்டணி
திமுகவை பொறுத்தளவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவது கஷ்டம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே வலுவான கூட்டணிக்கு அடித்தளம் அமைக்க திமுக தலைவர் கருணாநிதி வலைவீசி வருகிறார். விஜயகாந்த்தின் தேமுதிகவுடன் நெருக்கம் காட்டி கட்டியணைக்க போனபோது, 3 டிஜிட்டில் தொகுதிகளை ஒதுக்கித் தந்தால்தான் கூட்டணி என்று கேப்டன் போட்ட கண்டிஷனால், அப்படியே பின்வாங்கியது திமுக என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

காங்கிரசும் கைவிட்டது
சரி, வழக்கம்போல காங்கிரசுடன் கை கோர்த்துவிட வேண்டியதுதான் என்று களமிறங்கபோனால், 'ஆட்சியில் பங்கு அப்படியில்லை என்றால் நீங்கள் ஆடுவதெல்லாம் போங்கு' என்று கூறி பிம்பிளிக்கி பிளாக்கியென்றாராம் இளங்கோவன். ஆட்சியில் பங்கெல்லாம் கொடுத்து எங்களுக்கு பழக்கமில்லையே என கைபிசைகின்றது திமுக தலைமை. இதனால் காங்கிரசும், கூட்டணிக்கு கல்தா கொடுத்துவிட்டது.

திருமா கொடுத்த குருமா
சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் நலன் என்று சொல்லிக்கொண்டே, அந்த ஓட்டு வங்கியை குறிவைத்து விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் கட்சிகளுடன் நெருக்கம் காட்ட கருணாநிதி முயன்றபோது, திருமாவோ, மாற்றத்துக்கான கூட்டணி ஆட்சி என்ற குருமாவை பரிமாறிவிட்டார். இவங்களும் பங்கு கேட்கிறார்களே என்று திமுக திருதிருவென விழித்துக்கொண்டுள்ளது.

பாமகவுக்கு இக்கட்டு
பாஜக கூட்டணியில் பாமக உள்ளபோதிலும், இலையுடன், தாமரை சேருவதால், இயல்பாகவே மாங்கனி உடன் இருக்க முடியாத சூழ்நிலை. திராவிட கட்சிகளுடன் கூட்டணியில்லை என்று ராமதாஸ் சூளுரைத்துள்ளதால், திமுக பக்கமும் போகமுடியாது. ஒருவேளை போனாலும், உள்ள ஓட்டும் போய்விடும். எனவே, முழுக்க தனது வாக்கு வங்கி பலத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாமக.

கேப்டன் பிளான்
சட்டசபையில், நாக்கை துருத்தியதால், இனி அம்மா பக்கம், அடியெடுத்து வைக்க முடியாது கேப்டன் கட்சியால். திமுகவுடன் சேர்ந்தால், 3 டிஜிட் தொகுதியும், கூட்டணிக்கு தலைமை கட்சி என்ற பெருமையும் கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கு சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும். எருதுக்கு விருது கிடைக்க வேண்டும், சர்ப்பம்தான் கர்ப்பம் தரிக்க வேண்டும். முரசு கொட்டியபடியே மாங்கனியை சுவைக்க முடியாது. எனவே பரம வைரியான பாமக பக்கமும் கேப்டன் போக முடியாது.

முரசறைய கை தேவை
கூட்டணி சிக்கலால், கையை வளைத்துபோட விஜயகாந்த் முடிவு செய்துவிட்டார். ஏற்கனவே, தமிழ்மாநில காங்கிரஸ் உதயத்தால் கலக்கத்திலுள்ள காங்கிரசும், விஜயகாந்த் தலைமையில் 'காமராஜர் ஆட்சி' அமைக்க முன்வரலாம் என்று தெரிகிறது. சென்னையில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதான இளங்கோவனை சூட்டோடு சூடாக மண்டபத்திலேயே போய் பார்த்து, கையால் முரசு கொட்ட கங்கணம் கட்டிவிட்டார் கேப்டன்.

வைகோ
இப்போது வைகோவை வளைத்துப்போட திமுக முயன்றுவருகிறது. திமுக குடும்ப சேனல்களில் எப்போது திரும்பினாலும், கருணாநிதியைவிட அதிகமாக வைகோ முகமே தெரிகிறது. அவரும் மைக் கிடைத்த நேரத்தில் எல்லாம் தம் கட்டி பேசி, சேனல் பலத்தால் கிடைக்கும் பப்ளிகுட்டியை பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால் திமுகவின் ஆசையில், ஆசிட் வீசிவிட்டார் திருமாவளவன்.

வைகோவை வளைத்த திருமா
கலிங்கப்பட்டியில், வைகோ போராட்டம் நடத்தியபோது, அந்த களேபரத்துக்கு நடுவேயும், கேப்பில் புகுந்து, வைகோவுடன் ஒரே ஜீப்பில் நின்றபடி, திருமாவளவன், வைகோவை அண்ணா, அண்ணா என்று அழைத்து உருகியதை பார்த்து அறிவாலயம் பக்கத்தில் புகை கிளம்பியதாம். கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம்போலவே இருந்தது வைகோவும், திருமாவும் உரையாற்றிய விதம். மதிமுகவுக்கு, மாநிலம் முழுவதிலும் சிறுத்தைகள் தோள்கொடுப்பார்கள் என்று கூட்டணி தேதியை முத்தாய்ப்பாய் குறித்து கொடுத்துவிட்டு வந்துவிட்டார் திருமா.

வைகோ கூட்டணி
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து, திருமா கூறியதை போன்ற 'மாற்றத்திற்கான' கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்த கட்சிகள் அழைப்புவிடுத்த கடையடைப்புக்கு திமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. திமுக ஆதரவு தெரிவிக்காமலே கடையடைப்பு வெற்றி பெற்றது என்று சொல்ல வைகோவும் மறக்கவில்லை.

நாடகம்
நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ஒரு மாதம் முன்பே அறிவித்துவிட்டது. தமகாவோ, அதிமுக கூட்டணியில் சில தொகுதிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், மதுவிலக்கு என்ற பெரிய மாய நாடக திரையின் பின்னால் நடக்கும் கூட்டணி அச்சாரத்தில் பங்கேற்க முடியாமல் திமுகவும், பாமகவும் பார்வையாளர்கள் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications