தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப பாஜகவால் மட்டுமே முடியும் : தமிழிசை செளந்திரராஜன்
நெல்லை : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வார்டு பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர் பொது மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் 22 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கருப்பு பண முடக்கம், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பணிகளால் பாஜவுக்கு பின்னடைவு இல்லை. இதை தான் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. பாஜக மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதுவே பாஜகவின் முக்கிய பலமாகும்.
தமிழத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தை தற்போதைய சூழ்நிலையில் பாஜகவை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது. தமிழதத்தை மாற்றத்தை கொண்டு வருவதும் பாஜகவால் மட்டுமே முடியும்.
தற்போதைய ஆட்சியாளர்களால் தமிழகத்தில் வளர்ச்சி படு பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. வரி வருவாய் இல்லை, ஆனால் இலவச திட்டங்களை வாரி வழங்குகின்றனர். இதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.