அதிமுகவுக்கு மட்டும்தான் ‘அம்மா’ வா, பாஜகவுக்கும் இருக்காங்க 'தமிழ்' அம்மா..: முரளிதர ராவ்
சென்னை: தமிழகத்தில் மோடி நியமித்த பெண் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், இங்கு ஒரு புரட்சியை ஏற்படுத்தி பாஜகவை அரியணையில் ஏற்றுவார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளீதர ராவ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பொதுக்குழுக் கூட்டம் நேற்று பூந்தமல்லி குமணன்சாவடியில் நடந்தது. அதில், தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜனை மேலிடம் நியமித்ததற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இக்கூட்டத்தில், தமிழிசை செளந்தரராஜன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தமிழிசை செளந்தரராஜன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியது. அவருக்கு தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

வசுந்தரா ராஜே சிந்தியா...
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக வசுந்தரா ராஜே சிந்தியா நியமிக்கப்பட்டார். அவர் ராஜஸ்தானில் புரட்சியை ஏற்படுத்தி அங்கு பா.ஜ., ஆட்சியை அமைத்தார்.

புரட்சி செய்வார்...
அதே போல, தமிழகத்திலும் ஒரு பெண்ணையே மோடி தலைவராக நியமித்திருக்கிறார். அவர் தமிழிசை சவுந்திரராஜன். அவரும் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி, பாஜகவை அரியணையில் ஏற்றுவார்.

பாஜகவின் அம்மா...
தமிழகத்தில் அதிமுகவில் ஒரு அம்மா என ஜெயலலிதா கூறப்படுவது போல், பாஜகவும் தமிழகத்திற்கு ஒரு அம்மாவைக் கொடுத்துள்ளது. அது தான் தமிழிசை.

அடித்தளம்...
வரும் 2016ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்பதில், எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள், அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் நிலை...
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளார். திமுகவில் குடும்ப அரசியல் சண்டை நடக்கிறது. இதனால், இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பும், புழுக்கமும் ஏற்பட்டுள்ளது.

மாற்று கட்சி...
தமிழக காங்கிரசும் இரண்டாக உடைந்து விட்டது. எனவே, திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி என்றால், அது பாஜக தான்.

மோடியின் நல்லாட்சி...
மத்தியில் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. விலைவாசி குறைந்து விட்டது; பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

உடனடி தீர்வு...
அரியானா, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும். தமிழக மீனவர் பிரச்னைக்கு, உடனடி தீர்வு காணப்படுகிறது' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications