சென்னையில் பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்கள் - கடும் அவதி
சென்னை பல்லவன் சாலையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்து பாதியில் இறக்கி விட்டதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Recommended Video
சென்னை: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என்று அறிவிக்கப்பட்டதால் பல்லவன் இல்லம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அமைத்திருந்த தடுப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகள் மீது கற்களை வீசியதோடு கீழே இறக்கி விட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்லவன் இல்லத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊழியர்களிடம் தொழிற்சங்கத்தினர் எடுத்துரைத்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் வெளி ஆட்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள்
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முதல் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டம்
சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிந்தா முழக்கத்துடன் சிங்கியடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக அடையார் தி.நகர், பாரிமுனை, வடபழனி, அண்ணாநகர், தாம்பரம் உட்பட சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அதிருப்தியடைந்த ஊழியர்கள்
இதனிடையே இன்று மாலையில் போராட்டம் ஒத்திவைப்பு என்கிற தொழிற்சங்கங்களின் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிலாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. டிசம்பர் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கலாம் என்கிற நிர்வாகிகள் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரகளை செய்த தொழிலாளர்கள்
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர். நிர்வாகிகளை பேச விடாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட அவர்கள்,
காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு என்கிற நிர்வாகிகள் உத்தரவ ஏற்க முடியாது என்று தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் மீது கல்வீச்சு
தொழிற்சங்க நிர்வாகிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்லவன் இல்லம் பகுதியில் போக்குவரத்து ஊழியர்கள் ரகளை செய்தனர். பல்லவன் இல்லம் வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பல்லவன் இல்லம் பகுதியில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அச்சத்தில் பயணிகள்
பல்லவன் இல்லம் பகுதியில் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.
பல்லவன் இல்லம் பகுதியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகளில் இருந்து பயணிகளையும் கீழே இறக்கி விட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஒரு மணிநேரத்தில் போர்க்களமாக மாறியது பல்லவன் இல்லம் சாலை. போலீசார் சமரசம் பேசி ஊழியர்களை அழைத்து சென்றனர்.