மற்றொரு 2015 பெருவெள்ளத்திற்கு காரணமாகுமா 'ஓகி புயல்'? தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி- எக்ஸ்க்ளூசிவ்
புதிதாக உருவாகி இருக்கும் ஓகி புயல் குறித்தும் சென்னை மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னையில் தற்போது பெய்து வரும் மழை குறித்தும், புதிதாக உருவாகி இருக்கும் ஓகி புயல் குறித்தும் தமிழ்நாடு வெதர் மேன் பேட்டி அளித்துள்ளார்.
இந்த புயல் எந்த அளவுக்கு தமிழகத்தை பாதிக்கும், எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த சுனாமி எச்சரிக்கை குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழகத்தின் மோஸ்ட் வான்டட் மேனாக இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் 'ஒன் இந்தியா தமிழுக்கு' அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மழை எப்படி இருக்கும்
சென்னையில் தற்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வட சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக மழை விட்டு விட்டு பெய்யும். இந்த மழை பெரிய அளவில் சென்னையை பாதிக்காது. நாளை மதியத்திற்கு பின் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக நின்றுவிடும்.
ஓகி புயல் என்ன செய்யும்
ஓகி புயல் இப்போது திருவனந்தபுரம் பக்கத்தில் இருக்கிறது. இந்த புயல் தமிழகத்திற்கு அருகில் எங்கும் கரையை கடக்காது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அப்படியே அரபிக்கடல் பக்கம் சென்றுவிடும். இது தீவிரமான புயலாக மாறினாலும் அரபிக்கடல் பக்கம் செல்வதால் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
எங்கெல்லாம் காற்று வீசும்
இந்த புயல் காரணமாக சென்னையில் எங்கும் பாதிப்பு ஏற்படாது. சில தென்மாவட்டங்களில் காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. இப்போது கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது. தற்போது பலத்த காற்றாக வீசும் இது படிப்படியாக வேகம் குறையும். நாளை மதியம் எப்படியும் காற்றின் வேகம் மொத்தமாக குறைந்துவிடும். ஓகி புயல் அரபிக்கடல் நோக்கி செல்லும் போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்.
சுனாமி வருமா
சில நாட்களுக்கு முன்பு தென்னிந்தியாவை டிசம்பர் மாதம் சுனாமி தாக்கும் என்ற செய்திகள் வெளியானது. அதுகுறித்து வெதர்மேன் பேசியிருந்தார். அதில் ''நிலநடுக்கம் வந்தாதான் சுனாமி வரும். நிலநடுக்கம் வருவது குறித்து கணிப்பது கஷ்டம். அது சுனாமியை உருவாக்குமா என்று சொல்வது ரொம்ப கஷ்டம். கடலுக்குள் பூகம்பம் வந்தால் தான் சுனாமி வரும். யாரும் அதை சீக்கிரம் கணிக்க முடியாது. அதனால் வதந்தி எதையும் நம்பாதீர்கள்'' என்றார்.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மைய கணிப்பும், வெதர்மேன் கணிப்பும் சில சமயங்களில் ஒன்றாக இல்லாதது குறித்தும் பேசியுள்ளார். அதன்படி ''எப்போதும் என்னை மட்டும் பின்பற்றும்படி நான் சொல்வில்லை. வானிலை ஆய்வு மைய ரிப்போர்ட், நார்வே ரிப்போர்ட், நான் கொடுக்கும் ரிப்போர்ட் அனைத்தையும் செக் செய்வது நல்லதுதான். ஒருநாள் இரண்டு நாள் மழைக்கு ஒரே நபர் சொல்லக்கூடிய ரிப்போர்ட்டை பாலோ செய்ய கூடாது. அப்படியே கணிப்பில் ஏதாவது ரொம்ப வித்தியாசம் இருந்தால் நான் வித்தியாசம் இருப்பது குறித்து சொல்லிவிடுவேன்'' என்றார்.
அந்தமான்
அந்தமானில் உருவாகி இருக்கும் தாழ்வு நிலை குறித்து இப்போது கூற முடியாது. அதுகுறித்து சரியான விவரங்கள் தெரிய இன்னும் 5 நாட்களாவது ஆகும். அந்த தாழ்வுநிலை அப்படியே காணாமல் போகலாம். அதேசமயத்தில அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக கூட உருவாக்கலாம். அதை இப்போதைக்கு கணிக்க முடியாது.
மீண்டும் 2015?
இது கண்டிப்பாக இன்னொரு 2015 ஆ இருக்குமா என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. அது போக போக தான் தெரியும். எல்லோரும் இப்பவே எங்கு மழை பெய்யும், எங்கு பெய்யாது என்று கேட்கிறார்கள். எல்லா ஏரியாவுக்கும் தனித்தனியா வானிலை அறிக்கை சொல்ல முடியாது. 3 வருஷமா வானிலை அறிக்கை தருகிறேன் அதனால் இது எல்லாம் பழகிடுச்சு என்று கூறினார்.