காவிரியில் தண்ணீர் கிடைக்க தமிழர்கள் இதை செய்யுங்கள்.. எச்.ராஜா திமிர் பேச்சு
Recommended Video
மதுரை: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற வேல் சங்கமம் நிகழ்விற்கான பொதுக்கூட்டம் நேற்று மாலை, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், நாட்டுப்புற பாடகி பத்மஸ்ரீ, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:
திட்டம்தான்
நதிநீரை பங்கிட ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 4 மாநில தலைமைச் செயலர்களை அழைத்து மத்திய அரசு ஆலோசனை நடத்திவிட்டது. மத்திய அரசு தனது பணிகளை மேற்கொண்டபடிதான் உள்ளது. சுப்ரீம் கோர்ட் ஸ்கீம் என்ற வார்த்தையைதான் பயன்படுத்தியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
நீட் தேர்வை ஏற்கவில்லை
உச்சநீதி மன்ற தீர்ப்பில் வந்த நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொண்டனவா? அவர்கள் நீதிமன்ற உத்தரவு பற்றி பேச தகுதியற்றவர்கள். ஆனால் மத்திய அரசு எப்படி நீட் தேர்வை செயல்படுத்தியதோ அதே போல் காவேரி செயல் திட்டத்தையும் செயல்படுத்தும்.
பிரார்த்தனை
கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததா? இல்லை. எனவே, கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று தமிழக மக்கள் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்ற காலத்திலும் தமிழகத்திற்கு பெரும் பஞ்சாயத்துகளுக்கு நடுவேதான், கொஞ்சம், கொஞ்சம் தண்ணீர் கிடைத்து வந்ததே தவிர, தானாக முன்வந்து திறந்துவிடவில்லை என்பது நினைவிருக்கலாம்.
வேல் சங்கமம்
முன்னதாக, பொதுக்கூட்ட திடலில் முருகனின் ஆறு படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஊர்களில் இருந்து வேல் யாத்திரை ரதங்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆறு ரதங்களும் பங்குனி உத்திர நாளான இன்று பழநி முருகன் கோவில் சென்றடைந்து, பழநி முருகனிடம் வேல் ஒப்படைக்கப்பட உள்ளன.