பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வா? சமூக நீதியை கொல்லும் முடிவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது சமூக நீதியை கொல்லும் திட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது சமூக நீதியை கொல்லும் திட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் உண்டு என்கிறது. இதன் மூலம், மத்திய அரசு தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியையும் ஒழித்துவிடுவதுடன், தகுதி என்ற அளவுகோலால் சமூக நீதியையே தாக்கிக் கொன்றுவிடும் இந்த நீட்டை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட, இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் துணைத் தலைவரான எம்.பி.பூனியா, பொறியியல் படிப்புக்கு 2019ஆம் ஆண்டு முதல் நீட் வருகிறது என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மருத்துவப் படிப்பில் நீட் (National Eligibility and Entrance Test - NEET) தேர்வு திணிக்கப்பட்டு அதனால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் புறந்தள்ளப்பட்டிருப்பதையும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பே சிதையத் தொடங்கியிருப்பதையும் பார்க்கிறோம். இதற்காகவே திட்டமிட்டதைப் போல, 2017 மற்றும் 2018 நீட் தேர்வுகளில் தில்லுமுல்லுகள், உள்ளடி வேலைகள் அரங்கேறியதையும் பார்த்தோம்.
இந்த சதிச் செயல்கள் யாவும் நீட் வரும் பட்சத்தில் பொறியியல் கல்வித் துறையிலும் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.
மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல பொறியியல் கல்வியிலும் நாட்டில் முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புகளான 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளால் தகவல் தொழில்நுட்பம் உள்பட பொறியியல் தொழில்நுட்பத் துறை சிறப்புற்று விளங்குகிறது. இதனை ஒழித்துக்கட்டும் முயற்சியாகவே பொறியியல் படிப்புக்கும் நீட் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழக உயர்கல்வித் துறையை ஒழிக்க, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கைப்பற்றத் துடிப்பது ஒருபுறம் நடக்க, பொறியியலில் நீட்டைத் திணிப்பது அந்தத் துறையையே காலிசெய்யும் நோக்கிலானதாகும்.
நீட்டைக் கொண்டுவந்ததற்குக் காரணமே உலகத் தொழில்-வணிக அமைப்பு (World Trade Organization - WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கார்ப்பொரேட்டுகளிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது தான். நீட் கோச்சிங் சென்டர் பாக்கெட்களை நாடு முழுவதும் வைத்து கார்ப்பொரேட்டுகளின் கட்டணக் கொள்ளை கனஜோராக நடப்பதைப் பார்க்கிறோம். அதன் மூலம் வேதியலில் 0 மார்க் எடுத்த மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்ததையும் பார்த்தோம். இதனால் மருத்துவம் என்கின்ற உயிர்காக்கும் துறையே மாண்பை இழக்க நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த நிலை பொறியியல் துறைக்கும் நேரிடாது என்பதற்கு என்ன நிச்சயம்?.
ஆகவேதான் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியையும் ஒழித்துவிடுவதுடன், தகுதி என்ற அளவுகோலால் சமூக நீதியையே தாக்கிக் கொன்றுவிடும் இந்த நீட்டை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதில் நீதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்; முடக்கப்பட்ட நீட்-விலக்கு மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.