டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்..6 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
நாகை : டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இவை பெட்ரோல், டீசல், மண்ணென்ணை, சமையல் எரிவாயு என பிரிக்கப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நிரந்தர பணி வழங்க கோரி போராட்டம்
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியின்படி இந்நிறுவனத்தில் நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு
அவர்களுக்கு ஆதரவாக காவிரி டெல்டா டேங்கர் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற காவிரி டெல்டா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
பொதுமக்களும் போராட்டம்
இதனிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் நிறுவனத்தின் முன்பு ஆடு மாடுகளை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.