டாஸ்மாக் விடுமுறை: 256 மதுபாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் மதுபாட்டில்களை கடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் குடிமகன்களுக்கு அதிக விலையில் மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பல இடங்களில் எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.க்கள் ராஜா, ஜெயக்குமார், பிச்சையா, ஏட்டுகள் சுடலை, ஐசக் ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் பல குழுக்களாக பிரிந்து கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்த அன்பழகன், ஆறுமுகம், சீனிவாசன், முருகன், பெருமாள், செல்வராஜ், இசக்கி பாண்டி, சுரேஷ் ஜெயராஜ், சண்முகம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் அனைவரும் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்து மொத்தம் 256 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications