ரூபாய் நோட்டை மாற்றியவர்களைப் படம் பிடித்த ஒன்இந்தியா புகைப்படக்காரரிடம் டாஸ்மாக் கடைக்காரர் அடாவடி!
ரூபாய் நோட்டை மாற்றியவர்களைப் படம் பிடித்த ஒன்இந்தியா தமிழ் புகைப்படக்காரரின் கேமராவை வாங்கி போட்டோக்களை அழித்தார் டாஸ்மாக் விற்பனையாளர்.
சென்னை: 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றியவர்களை படம் பிடித்த ஒன்இந்தியா- தமிழ் புகைப்படக்காரரிடம் அடாவடியாக நடந்து கொண்டு கேமராவைப் பறித்து படத்தை அழித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் டாஸ்மாக் விற்பனையாளர்.
இன்று நள்ளிரவு முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து விட்டார். இதனால் நாடே அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது. மக்கள் பலரும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற அலைபாய்ந்து கொண்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர், வெற்றிவேல் தியேட்டருக்கு அருகில் உள்ள மாட்டுக் கடை என்று குடி மக்களால் செல்லமாக அழைக்கப்படும்
டாஸ்மாக் கடையிலும் மக்கள் பெருமளவில் வந்து ரூபாய் நோட்டுக்களை மாற்றினர்.
இதை நமது புகைப்படக்காரர் படம் எடுத்தார். இதைப் பார்த்த கடை விற்பனையாளர் வேகமாக வந்து எதற்குப் படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டு கேமராவைப் பிடுங்கினார். தான் பத்திரிகையாளர் என்றும், செய்திக்காகவே படம் எடுத்ததாகவும் அவர் கூறியும் கூட அதைக் கேட்காமல் எடுத்த படத்தையெல்லாம் அந்த கடைக்காரர் அழித்தார். இருப்பினும் சில படங்கள் மட்டும் தப்பி விட்டன.