பொதுச்செயலர் பதவியை காப்பாற்ற தலைகீழாக நின்று போராடும் சசிகலா கோஷ்டி!
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் நியமன விவகாரத்தில் புதிய திருப்பமாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதில் சசிகலா தரப்பு படுதீவிரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்கிற பஞ்சாயத்துக்கு இன்னமும் முடிவு வரவில்லை. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

கட்சி விதி இதுதான்
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் என்பவர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நியமன பொதுச்செயலர், இடைக்கால பொதுச்செயலாளர் என்பதெல்லாம் அதிமுக கட்சி விதிகளில் இல்லை.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
அப்படியும் பொதுச்செயலாளர் ஒருவர் இல்லையெனில் முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழிநடத்த வேண்டும் என கறாராக சொல்கிறது அதிமுக கட்சி விதிகள். இதனை முன்வைத்துதான் தேர்தல் ஆணையத்திடம் போராடிக் கொண்டிருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

சசிகலா நியமனம் செல்லாது
தற்போதைய நிலையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் சசிகலாவை நாங்களே நியமித்தோம் என கூறி பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் தம்பிதுரை.

இரண்டொருநாளில் முடிவு
இருப்பினும் இதை தேர்தல் ஆணையம் நிச்சயம் நிராகரிக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. வரும் 20-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications