காவிரி: ஓசூர், சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக எல்லை முற்றுகை போராட்டம்
மாநில எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்/சத்தியமங்கலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் எல்லை முற்றுகை போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. நாம் தமிழர் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் லால் பேருந்து நிறுத்தத்திலிருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை அக்கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். கர்நாடக - தமிழக எல்லையை முற்றுகையிடும் நோக்கில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
அதேபோல, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சோதனைச் சாவடியைத் தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றவர்களை சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.