வேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!
சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை: சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதனின் 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
எஸ்ஆர்எம் கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காசிக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் மதன்.
ஐந்து மாதங்களுக்குப்பிறகு திருப்பூரில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்நிலையில் ரூ.91 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை வடபழனி, வளசரவாக்கம், கேரளாவில் உள்ள அவரது அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.