எச். ராஜா.. இன்னொரு எஸ்வி சேகர் கேஸா அல்லது... ?
எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்க என்ன காரணம்?
சென்னை: எச். ராஜா விவகாரம் இன்னொரு எஸ்.வி.சேகர் கேஸாகுமா அல்லது உண்மையிலேயே கடுமையான நடவடிக்கை எச். ராஜா மீது பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் இது இன்னொரு எஸ்வி.சேகர் கேஸாகும் வாய்ப்புகளே பிரகாசமாக தெரிகின்றன.
எவ்வளவோ வழக்குகள் நீதிமன்றத்தில் மலைபோல் பலகாலமாக குவிந்துகிடக்க, எச்.ராஜா மீதான புகாரை உடனடியாக எடுத்து விசாரித்த விஷயம் உண்மையிலே பாராட்டத்தக்கது. ஒருவேளை நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக விரைந்து இந்த புகார் எடுத்துகொள்ளப்பட்டதா என தெரியவில்லை. இருந்தாலும் சம்பவம் நடைபெற்ற ஒரு நாளிலேயே நீதிமன்றம் இதனை அணுகியது நல்ல அம்சமே.
பண்ணை வீடு
அதேசமயம், காவல்துறை தரப்பில் என்ன மாதிரியா அப்ரோச் வரப் போகிறது என்பது தெரியவில்லை. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எச். ராஜா சாவகாசமாக தனது பண்ணை வீட்டில் தங்குகிறார். சாவகாசமாக அங்கிருந்து கிளம்பி காரைக்குடி வருகிறார். சாவகாசமாக இறங்கிப் போகிறார்.
எடிட்டிங், டப்பிங்
மேலும் இந்த பேச்சு பேசியது நான் கிடையவே கிடையாது, டப்பிங், எடிட்டிங் என்று ராஜா நேற்றே சொல்ல தொடங்கிவிட்டார். எனவே இந்த விவகாரம் "டைல்யூட்" ஆக ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது. மேலும் நான்கு வார கால அவகாசமும் ராஜாவுக்குக் கிடைத்துள்ளது. இதை வைத்து அவர் பல ஜெகஜால கில்லாடி வேலைகளை செய்ய முடியும் என்பதை எல்கேஜி குழந்தை கூட சொல்லி விடும்.
எஸ்.வி.சேகர் போலவா?
எஸ்.வி.சேகர் விவகாரம் போல இல்லை இது. எச்.ராஜா பொது வெளியில் நீதித்துறையை கேவலமாக பேசியுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றமே நான்கு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அப்படி இருக்கையில், காவல்துறை மட்டும் அவசரம் காட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே காவல்துறையும் கூட நிதானமாகவே செயல்படும் என்று தெரிகிறது. அவசரம் காட்டாது. அப்பாடா இப்போதைக்கு நமக்கு நெருக்கடி இல்லை என்ற உணர்வுதான் காவல்துறையிடம் இருப்பது போல தெரிகிறது.
நிதானத்தில் காவல்துறை
உண்மையில் காவல்துறையைத்தான் மிக மிக கடுமையாக ஏசியுள்ளார் ராஜா. சாமானியர்கள் இப்படிப் பேசியிருந்தால் இந்த நேரத்திற்கு ஊபா சட்டம் பாய்ந்திருக்கும்.. குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும்.. குண்டுக்கட்டாக தூக்கிப் போயிருப்பார்கள்.. ஆனால் ராஜா விவகாரத்தில் காவல்துறை வழக்கத்தை விட நிதானேமே காட்டுகிறது.
தமிழக அரசின் குடுமி
உண்மையில் ராஜாவின் குடுமி தமிழக அரசிடம் சிக்கியுள்ளது, சாதாரணமாக அல்ல, வலுவாக. தமிழக அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எடுக்கவும் முடியும். ஆனால் தமிழக அரசிடமிருந்து ஒரு கண்டனம் கூட இதுவரை வரவில்லை. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. காரணம் தெரிந்ததுதான்.. தமிழக அரசின் குடுமி யாரிடம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே!
கனிவு பார்வையே
இந்த விவகாரத்திலிருந்து கிடைத்துள்ள நீதி: சாமானியர்கள் சாதாரணமாக பேசினால் கூட கடும் நடவடிக்கை பாயும். பாஜக விஐபிகள் கடுமையாக பேசினாலும் கனிவு பார்வை மட்டுமே பதிலாக கிடைக்கும்!