10 மணி நேரம் மின் வெட்டு- இருளில் தவிக்கும் நெல்லை மாவட்டம்
நெல்லை: தமிழகத்தில் மீண்டும் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் எங்கெங்கும் இருளாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லாததால் கடுமையாக மின் வெட்டு நிலவுகிறது. புதிய மின் திட்டங்கள் நிறைவு பெறாத நிலையில் தற்போது காற்றாலையும் காலை வாரிவிட்டது.
வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதால் அங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை சுமாராகவே பெய்தது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக மின் நுகர்வு குறைந்த போதிலும் மின் தடை குறைந்தபாடில்லை.
கடந்த 10 நாட்களாக காற்றாலைகள் சரியாக இயங்கவில்லை. இவற்றின் மூலம் 4 மெகா வாட் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருவதால் அங்கும் மின் உற்பத்தி குறைந்த அளவே செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமுலில் உள்ளது.
வழக்கமாக கோடைகாலங்களில்தான் இது போன்ற நிலை ஏற்படும். நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இப்படி 10 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் திண்டாடி விட்டனர். அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.