இறப்பிற்கு பின் ஆவியாக அலைய வேண்டாம்- உறுப்பு தானம் செய்து உலகம் உள்ளவரை வாழுங்கள்!
சென்னை: உயிரற்ற உருவங்களாக கருதப்படும் ஆவி, பேய், பிசாசுகள், பூதங்களின் மேலான நம்பிக்கைகள் இந்த மாடர்ன் உலகிலும் பரவலாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
இறப்பிற்கு பின்னால் மனிதன் என்னவாகின்றான் என்ற கேள்வி காலம்காலமாக எல்லா மதத்தினரிடையேயும் இருகின்ற ஒன்று.
ஆனால், உண்மையிலேயே இறப்பிற்கு பின்னரும் ஒரு மனிதனால் வாழ முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கான வழிதான் "உறுப்பு தானம்".
மாற்று உறுப்புகள் தேவை:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகள் செயலிழந்து போய் மாற்று உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
உறுப்பு தானம் அவசியம்:
ஒவ்வொரு வருடமும் 80 லட்சம் பேர் இறக்கின்ற போதிலும் சிலர் மட்டுமே தங்களுடைய உறுப்புகளைத் தானம் செய்கின்றனர். இது வெறும் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.
உயிருடன் இருக்கும் போதும்:
வாழும் போதே கூட ஒருவரால் உறுப்பு தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும்போது தன்னுடைய உடலிலிருந்து சிறுநீரகம் மற்றும் ஈரலை ஒருவரால் தானமாக அளிக்க முடியும்.
தவறான நம்பிக்கை:
தானம் செய்யும்போது தனது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும், வாழும் மீதிகாலம் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் தானம் செய்பவர்கள் நினைப்பது தவறானது.
நல்ல ஓய்வு மட்டுமே தேவை:
அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வும், குறிப்பிட்ட காலத்திற்கு பரிசோதனைகளும் மட்டுமே அவசியமாகும். ஈரல்தானம் செய்தால் 6 மாத ஓய்வும், கிட்னி தானம் செய்தால் 3 மாத ஓய்வும் தேவை அவ்வளவே.
10 பேருக்கு வாழ்க்கை “கியாரண்டி”:
உயிருடன் இருக்கும்போது செய்யும் தானம் மூலமாக இரண்டு பேரையும், இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் மூலமாக கிட்டதட்ட 10 பேரின் வாழ்க்கையையும் ஒரு மனிதனால் திருப்பி அளிக்க முடியும். தற்போதைய காலகட்டத்தில் இறந்து போனவர்களின் தோலைக் கூட தானமாக அளிக்க முடியும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்.
ஆயிரம் பேரை வாழவைக்கலாம்:
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 5 பேர் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தால் 2200 உடலுறுப்புக்கள், 10 ஆயிரம் சிறுநீரகங்கள், 5 ஆயிரம் இதயம், 5 ஆயிரம் கல்லீரல்கள் கிடைக்கும். இதை இந்தியா மட்டுமின்றி ஆசியா கண்டம் முழுவதும் உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியும்.
உறுப்பு கொடையின் மகத்துவம்:
உறுப்பு தானத்தின் மகத்துவத்தினை எடுத்துறைக்கும் வகையில் நேஷனல் பவுண்டேஷன் லிவர் ரிசர்ச் சென்டர் சார்பில் குறும்படம் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையை விதைப்பவர்கள்:
உறுப்புகள் செயலிழந்த ஒவ்வொரு மனிதனுக்குமான தன்னம்பிக்கையை மற்றொரு மனிதனின் உறுப்பு தானத்தினால் அளித்துக் காப்பாற்ற முடியும் என்பதை அழகாக விவரித்துள்ளது இந்த வீடியோ.
இறப்பு ஒரு முடிவல்ல:
"ஒரு உறுப்புக் கொடையாளி பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இறப்பு வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம். உறுப்புகளைத் தானம் செய்து உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற வார்த்தைகளுடன் முடிகின்றது அந்த வீடியோ.
மீண்டுமொரு வாழ்க்கை:
இப்போது சொல்லுங்கள் இறப்பிற்கு பின்னரும் 8 பேரின் மூலமாகவாவது மீண்டும் உலகில் வாழமுடியும் என்றால் ஆவி, பேய், பிசாசு, பூதமெல்லாம் மூட நம்பிக்கைதானே...
மறுபிறப்பு சாத்தியமே:
மறுபிறப்பினை மட்டுமே ஒத்துக் கொள்ளலாம் மற்றவர்களை வாழவைப்பதால்... உறுப்பு தானம் செய்து உயிருக்கு போராடுபவர்களை வாழவைத்து, நீங்களும் வாழுங்கள் நிரந்தரமாக!
உறுப்பு தானம் செய்ய:
http://www.mode.org.in/online_registration.aspx
இறப்பிக்குப் பின்னர் உறுப்பு தானம் செய்து, உன்னதமான புதிய வாழ்க்கையைத் இன்னொரு உயிரின் வாழ்க்கையுடன் சேர்ந்து தொடங்குங்கள்!