'காலா' கதைக்கு உரிமை கோரிய துணை இயக்குனருக்கு கொலை மிரட்டல்… காஞ்சிபுரம் எஸ்பியிடம் 'திடுக்' புகார்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'காலா' திரைப்பட கதைக்கு உரிமை கோரிய துணை இயக்குனர் ராஜசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் போலீசில் புக
காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரிய திரைப்பட துணை இயக்குனர் கே.ராஜசேகரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா என்ற கரிகாலன்' படத்தின் தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு தன்னிடம் இருந்து திருடப்பட்டதாக திரைப்பட துணை இயக்குநர் கே.ராஜசேகரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நாளை மறுநாள் வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ராஜசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலையடுத்து துணை இயக்குனர் ராஜசேகரன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கூடுவாஞ்சேரி மோட்டலில் மிரட்டல்
அந்த மனுவில், " வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுப்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்றோம். அப்போது கூடுவாஞ்சேரியில் சாலையோர உணவகம் ஒன்றில் வைத்து அறிமுகம் இல்லாத 2 பேர், காலா தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு, எங்களை மிரட்டினர்." என்று கூறியுள்ளார்.
பின் தொடர்ந்து வந்து கொலை மிரட்டல்
மேலும் அவர் அந்த மனுவில், "கூடுவாஞ்சேரி உணவகத்தில் இருந்து தப்பி, பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அவர்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அவர்கள் தங்களை மணிமாறன், டேவிட் மற்றும் கூடுவாஞ்சேரி குமார் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
கார் கண்ணாடி உடைப்பு
எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியபடியே, நாங்கள் உட்கார்ந்திருந்த கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் பயந்த நாங்கள் மிரட்டிய நபர்கள் குறித்து புகார் அளித்தபோது, அதை மறைமலை நகர் போலீசார் வாங்க மறுத்துவிட்டனர்.
போலீசே எச்சரித்த கொடுமை
ஆனால், மிரட்டியவர்கள் சாதாரண நபர்கள் அல்ல என்று எங்களை மறைமலைநகர் போலீசார் எச்சரித்தனர். அதனால் அங்கிருந்து வெளியேறிய நாங்கள், தபால் மூலம் புகார் அனுப்பினோம். அதன் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.