சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
ஆட்சியரிடம் சென்ற விவசாயிகள் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அரூர்: சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க சென்ற விவசாயிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விவசாயிகள் புகார் மனு அளிக்க நடந்தே சென்றனர்.
தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வாகனங்கள் கடக்கின்றன. ஆனால் பசுமை விரைவு சாலை அமைத்தால் 66 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகும் என எண்ணியதால், சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டது.
இதனால் தூரமானது 274 கிலோ மீட்டராக குறைவதுடன் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் இந்த பயண தூரத்தை கடந்து விடலாம் என கூறப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரூர் பகுதியில் முதல் கட்ட பணிகளாக பசுமை வழிச்சாலை செல்லும் பகுதியில் குறுக்கிடும் கிராமச்சாலை ஓரங்களில் கான்கிரீட்டால் அளவு கற்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இந்த எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் இந்த சாலை செல்வதால், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும், கற்கள் வைக்கப்பட்டள்ள பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களும், வீடுகளும், அரசு பள்ளி கட்டிடங்களும் இடிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும் அச்சம் தெரிவித்திருந்தனர். இதனால் பசுமை விரைவு சாலையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி பசுமை வழிச்சாலையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சிய விவசாயிகள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க இன்று விவசாயிகள் திரண்டு ஒரு வாகனத்தில் புறப்பட்டனர்.
ஆனால் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் சென்ற விவசாயிகளின் வாகனத்தை போலீசார் அரூர் அருகே தடுத்து நிறுத்தினர். எனினும் விவசாயிகள் வாகனம் இல்லாவிட்டால் என்ன, என்று ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க நடந்தே சென்றனர்.