துப்புரமணி... துப்பாத நீ... எச்சில் துப்புவதை எதிர்க்கும் பாடல்
சென்னை: ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகள், பொது இடங்கள் என எங்கே பார்த்தாலும் எந்த கவலையும் இன்றி எச்சில் துப்புபவர்களை பார்த்திருப்போம். பலரும் பான்பராக், வெற்றிலை போட்டு துப்பி வெள்ளை சுவருக்கு சிவப்பு சாயம் பூசியிருப்பார்கள். இப்படி எச்சில் துப்பும் மனிதர்களை கிண்டலடித்து ஒரு பாடல் பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார் அர்ச்சித் என்ற இளைஞர்.

இவர் நடிகர் மதன் பாபுவின் மகன் என்பது கூடுதல் தகவல். கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை கூறும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்.
பொது இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதார கேடு ஏற்படுவது மட்டுமின்றி,அதனை தெரியாமல் மிதித்துச் செல்பவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்ற கருத்தை வலியுறுத்துகிறது "துப்புர மணி...துப்பாத நீ.." என்ற பாடல்.
சமூக வளைதளங்கள் வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டுமே என பலர் நினைத்து வரும் நிலையில்,தனது பாடலை சமூக வளைதளத்தில் வெளியிட்டு பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் அர்சித். அந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
அடுத்ததாக குடித்துவிட்டு வாகனம் ஒட்டுறவங்கள பற்றிய வீடியோவுக்கு தயாராகி வருவதாக கூறும் அர்ச்சித், மத்திய அரசோடு இணைந்து இதோட இந்தி வெர்ஷன் பண்ற வேலைகள்லயும் இறங்கியிருக்கோம் என்கிறார். இனி பொது இடத்தில் துப்பும் முன் கொஞ்சம் யோசிங்க மக்களே!












Click it and Unblock the Notifications