அணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை: அடித்து சொல்லும் மாஃபா பாண்டியராஜன்!
அணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய டிடிவி தினகரன் அளித்திருந்த 60 நாட்கள் அவகாசம் முடிய உள்ள நிலையில் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் வரும் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அணி இணைப்பு?
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், அதிமுக தலைமைக் கழகம் ஓ.பி.எஸ். அணிக்கு தான் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
எந்த அதிருப்தியும் இல்லை
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்றும் அவர் கூறினார். மேலும் ஓபிஎஸ் அணியில் எந்த அதிருப்தியும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்
ஓபிஎஸ் அணியின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைப்பு தானாக நிகழும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுகவில் மீண்டும் அனல்
இதில் ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இரு அணிகளும் மாறி மாறி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவதால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் அனல்பறக்க தொடங்கியுள்ளது.