இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த சரோனுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இந்திய கடல் எல்லைக்குள்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். சரோன் காயமடைந்தார்.
சம்பவம் நிகழ்ந்து 10 மணி நேரமாக வாய்திறக்காமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிரிட்ஜோவுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த சரோனுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு காரணமாக இருந்த இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேறஅகொள்ள வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவருக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றார் அவர்.