ஓபிஎஸ்-க்கு எதிராக லட்சுமிபுரம் கிராம மக்கள் உண்ணாவிரதம்... மீண்டும் வெடித்த கிணறு விவகாரம்!
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறுகளால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி பெரியகுளம் அருகே இன்று லட்சுமிபுரம் கிராம மக்கள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழத்தில் ராட்சத கிணறு தோண்டப்பட்டுள்ளது. இவற்றால் அப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அமைதி காத்து வந்தனர்.
இந்த நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் ஒன்று கூடி இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணறை முற்றுகையிடவும் முயன்றனர்.
அப்போது நடந்த போராட்டத்தில் கிராம மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அதனைக்கண்டித்து கடந்த 17ம் தேதி லட்சுமிபுர கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த பேச்சுவர்த்தையில் சர்ச்சைக்குரிய கிணறு கிராமத்துக்கு ஒப்படைக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது. மேலும் கூறியபடி 90 நாட்களுக்கு தண்ணீர் எடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் லட்சுமிபுரம் மக்கள் கிணறை பஞ்சாயத்தில் ஒப்படைக்க வலியுறுத்தி இப்போது மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications