கருணாநிதிக்கு தென்காசி நீதிமன்றம் நோட்டீஸ்
தென்காசி: தென்காசி நீதிமன்றம் திமுக தலைவர் கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தமது கட்சியை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. இந்த உட்கட்சி தேர்தலில் பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் காரணமாக அடிதடி, மோதல், மண்டை உடைப்பு சம்பவங்கள் அங்காங்கே அரங்கேறி வருகின்றன.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஓன்றியத்திற்கு நேற்று தேர்தல் என அறிவி்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தென்காசி கோர்ட்டில் திமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் ஆலங்குளம் ஓன்றியத்தில் 13 ஊராட்சிகள் உள்ளதாகவும், அதில் 4 ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள 9 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல் கடந்த 29 ஆம் தேதி திமுக தலைமை 2ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இத்தேர்தலுக்கு முன் 15 நாளைக்கு முன் முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்பே தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அறிவிப்பை முறையாக வெளியிடாமல் குறுகிய காலத்தில் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மனுவை ஏற்று கொண்ட நீதிபதி கதிரவன், திமுக தலைவர் கருணாநிதி, பொது செயலாளர் அன்பழகன், ஆலங்குளம் ஓன்றிய தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கினை வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். திமுகவின் உட்கட்சி தேர்தல் கோஷ்டி பூசல் நெல்லை மாவட்டத்தில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கருப்பசாமி பாண்டியன், ஆவுடையப்பன், பூங்கோதை, ஆலடி அருணா என அங்காங்கே கோஷ்டிகள் உள்ளதால் மாவட்டத்தில் பரபரப்பான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
திமுகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி கோஷ்டி மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திட அதிமுக தரப்பு திமுகவினரை தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.