தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினி.. திருமாவளவன்!
தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் உடன்பாடில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளனர்.
அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் போருக்கு தயாராக இருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அரசியலுக்கு பலமே எதிர்ப்புதான் என்றும் அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு அவர் நிச்சயம் அரசியலுக்கு வரும் ஐடியாவில் உள்ளார் என்பதை வெளிப்படுத்தியது. இதையடுத்து அவரை வளைத்துப்போட தேசியக் கட்சிகள் பெரும்பாடு பட்டு வருகின்றன.
ரஜினியை எதிர்க்கும் சீமான்
இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு கன்னடர். அவர் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிடோர் கன்னடரான ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என கண்டனம் தெரிவித்தனர்.
ரஜினிக்கு வரவேற்பு
அதேநேரத்தில் திருநாவுக்கரசர், திருமாவளவன், ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றனர். ஒருபக்கம் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து வந்தது.
தனக்கு உடன்பாடில்லை
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன், தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார். தானும் தமிழ்தேசியத்தை சேர்ந்தவன்தான் என்று கூறிய திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வரகூடாது என நடத்தப்படும் போராட்டங்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார்.
உணர்வோடு கலந்துள்ளார்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி தமிழகத்தில் வசித்து வருகிறார் என்றும் திருமாவளவன் கூறினார். ரஜினிகாந்த் தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.