நீட் தேர்வு.. பாழாய்ப் போகிறது மாணவர்களின் எதிர்காலம்.. மோடி நல்ல முடிவை எடுக்க திருமாவளவன் கோரிக்கை
தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போகாமல் தடுக்க, நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போகாமல் தடுக்க பிரதமர் மோடி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக 27ம் தேதி திமுக நடத்தும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் விசிக பங்கேற்கும். கடலூரில் நடக்கும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு குறித்து மத்திய அரசு உடனடி முடிவை எடுக்க வேண்டும். குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன்.
இதுகுறித்து பிரதமர் மோடி நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications