காணும் பொங்கலுக்காக தயாராகும் தாமிரபரணி - சீரமைப்பு பணி தீவிரம்!
காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி அணையின் கீழ்பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி : காணும் பொங்கல் நாளில் மக்கள் தாமிரபரணி அணையின் கீழ் கொண்டாடுவதற்காக அதனை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அணையின் கீழ் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் கொண்டாட்டத்திற்காகக சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதிக்கு கீழ்பகுதியில் இருந்த மணற்பாங்கான பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 2 கிமீ வரையில் சுற்று வட்டார கிராம மக்கள் காணும் பொங்கலன்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கரும்பு, பனகிழங்கு சாப்பிடுவதற்காக கூடுவது வழக்கம். தற்போது இந்த பகுதியில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
இதனால் காணும் பொங்கலன்று ஆற்றில் விளையாடும் வழக்கம் காணாமல் போனது. இந்த நிலையில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அழகுப்படுத்தும் பணியை கலெக்டர் துவங்கி வைத்துள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் தேங்கிய அமலை செடிகள் முற்றிலுமாக அகற்றியதால் அணை தண்ணீர் கடல் போல் காட்சியளிக்கிறது.
அணையின் கீழ்பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு பளிச்சென்று காணப்படுகிறது. இதுகுறித்து தாசில்தார் கூறியதாவது, ஸ்ரீவைகுண்டம் தாலுகைவை பொறுத்தவரை விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டு மக்கள் வாழ்க்கின்றனர். பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீரை போராடி பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் கருவேல மரங்கள் இடைஞ்சலாக இருப்பதால் அதை தற்போது முதற் கட்டமாக முற்றிலும் இல்லாத நிலையில் சீரமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.