அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ஊக்குவிக்க சுவர் ஓவியம்... நெல்லையி அசத்தல் முயற்சி!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியை ஊக்குவிக்கும் விதமாக சுவர் ஓவியங்கள் வழியே கற்பிக்கும் முறை நெல்லையில் வரவேற்பை பெற்றுள்ளது.
திருநெல்வேலி : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆங்கில கல்வி திறனை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி நெல்லையில் அரசுப் பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படுவது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் ஒரு முயற்சியாக அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) மூலம் 1 முதல் 6ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்பறை சுவர்களில் கண்ணை கவரும் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாடம் தொடர்பான ஓவியம் வரையப்படுகிறது. இடவசதி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் குறைந்தது இரண்டு வகுப்புகளில் இந்த சுவர் சித்திரம் வரையப்படுகிறது.
இயற்கை காட்சிகள், வாழ்க்கை நடைமுறை நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும், ஓவியமாக வரையப்படுகிறது. அதில் ஆங்கில வார்த்தைகள், ஆங்கில இலக்கண வார்த்தைகள் குறிக்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது. இந்த சுவர் சித்திரம் கல்வி ஊக்குவிப்பு முறை இந்தாண்டு 84 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி முறை தனியாருக்கு நிகராக இருப்பதுடன் ஆரம்ப கல்வி கற்கும் ஏழை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கல்வி கற்கின்றனர். இந்த முறைக்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் விரிவுப்படுத்த கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.