ரூ.27 ஆயிரம் கடனுக்காக அவமானப்படுத்திய வங்கி... திருவண்ணாமலையில் பெண் தற்கொலை!
கடனை திருப்பி செலுத்தாததால் அவமானப்படுத்திய தனியார் வங்கி அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை : சுய உதவிக்குழு மூலம் ரூ. 27 ஆயிரம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தனியார் வங்கி ஏஜென்ட்டுகள் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண் சுயஉதவிக் குழுவின் உறுப்பினராக உள்ளார். தன்னுடைய கணவரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக தேன்மொழி தனியார் வங்கியான எச்டிஎஃப்சியின் சுயஉதவிக்குழு மூலம் ரூ.27 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் கடந்த 3 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார் தேன்மொழி. இதனால் நேற்று தனியார் வங்கியின் 3 ஏஜென்ட்டுகள் தேன்மொழி வீட்டின் முன்பு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
தவணை செலுத்தாததால்
இதனால் மனமுடைந்த தேன்மொழி திடீரென தனது வீட்டின் அறைக்குள் சென்று தாழிட்டுள்ளார். தேன்மொழி பணம் எடுக்கத் தான் சென்றிருக்கிறார் என்று நினைத்து கலெக்ஷன் ஏஜென்ட்டுகளும் வீட்டு வாசலிலேயே காத்திருந்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் வாசலில் நின்ற போதே
தேன்மொழியின் கணவர் சேகரும் வீட்டின் வெளியே தான் இருந்துள்ளார். ஆனால் வங்கி கலெக்ஷன் ஏஜெண்ட்டுகள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போதே தேன்மொழி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசைபாடிய வங்கி ஏஜென்ட்டுகள்
சுமார் அரை மணி நேரமாகியும் தேன்மொழி வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது தான் தேன்மொழி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்தே கலெக்ஷன் ஏஜென்ட்டுகள் தேன்மொழி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
போலீஸ் வழக்குப் பதிவு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேன்மொழியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.