அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை.. எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சென்னை: விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
வரும் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும், 15ம் தேதி சுதந்திர தின விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களும் இணைந்துள்ளதால் 4 நாட்கள் தொடர்ந்து அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் தங்கிப் படிக்கும், வேலை பார்க்கும் நபர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

இதனால் 11ம் தேதி இரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. இதையடுத்து ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல பயணக் கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளன.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, அதிக கட்டணம் வசூலித்த 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் பிடிக்கப்பட்டன.
பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்கலாம். அதற்காக இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 18004256151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயணிகள் கட்டணம் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 4 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டர் கோரியுள்ள 2000 புதிய பேருந்துகள் வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications