டிவி சேனல் ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலி.. நீதிமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு காத்திருக்கும் அக்னி பரிட்சை!
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்களித்ததாக தொலைக்காட்சி சேனல் ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலமாகியுள்ளதால், இதுதொடர்பாக திமகு தொடர்ந்த வழக்கிற்கு வலு சேர்ந்துள்ளது. இது சபாநாயகர் மற்றும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது
சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
அடிதடி
போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
பணம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயர் தனபால், ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதுதான், தற்போது ஸ்டிங் ஆபரேசனில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்எல்ஏக்கள் பணம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.
|
வீடியோ
நேற்று வெளியான இந்த வீடியோ நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக தொடர்ந்து வழக்கிற்கு கூடுதல் வலு கிடைத்துள்ளது. பணம் கொடுத்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றீர்களா என்ற கேள்வியை அரசை நோக்கி நீதிமன்றம் எழுப்ப வாய்ப்புள்ளது.
அடுத்து என்ன செய்யும் நீதிமன்றம்
மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான, பணம் தொடர்பான உரையாடல்கள் அடங்கிய வீடியோ ஆதாரத்தை அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க நீதிமன்றம் கேட்கவும் வாய்ப்புள்ளது. இதில் உண்மை இருப்பது தெரியவந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவித்து மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.
சிக்கலில் பழனிச்சாமி அரசு
இப்படி இனிமேல் கோர்ட்டில் நடைபெற உள்ள பல திருப்பங்களுக்கு இந்த ஸ்டிங் ஆபரேசன் வித்திட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் அரசுக்கு இந்த தலைவலி கூடுதலாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.