14 வயது பெண் காதல்.. பஞ்சாயத்து பேசிய போது பயங்கரம்.. தேமுதிக செயலாளரின் அண்ணன் கொடூர கொலை
திருப்பத்தூர் : 14 வயது பெண்ணை காதலித்த இளைஞரை தட்டிக்கேட்டதால் திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஹரிகிருஷ்ணனின் அண்ணன் மாதேஸ்வரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஞானவேல் என்பவருக்கும் தேமுதிக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தட்டிக் கேட்க சென்ற ஹரிகிருஷ்ணன் அண்ணன் மாதேஸ்வரன்க்கும் ஞானவேலை க்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஞானவேலின் நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மாதேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மாதேஸ்வரன் உயிர் இழந்துள்ளார்.
கண்டித்தார்கள்
இந்த சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி திருப்பத்தூர் அடுத்த கந்திலி எர்ரம்பட்டி பகுதியைச் சார்ந்த காத்தவராயன் மகன் ஞானவேல் (24) இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது ஆன பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் பெண்ணுடைய பெற்றோருக்கு தெரிய ஞானவேலை கண்டிக்க அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சரமாரி தாக்குதல்
இதன் காரணமாக ஹரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன் மாதேஸ்வரன் ஆகியோர் ஞானவேலை அழைத்து பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் அதிகமாகவே ஞானவேலின் கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன்கள் சந்தோஷ் (27) துளசி(30) மற்றும் பாலகிருஷ்ணன் மகன் கதிர்வேலு(25) ஜிடி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பெருமாள்(25) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன் மாதேஸ்வரன் சரமாரியாக தாக்கியுள்ளனர்
4 பேர் கைது
இதனால் சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரன் மயங்கி விழுந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாதேஸ்வரன் அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் அறிந்த போலீசார் ஞானவேல் சந்தோஷ் துளசி பெருமாள் ஆகிய 4பேரை கந்திலி போலீசார் கைது செய்து உள்ளனர் கதிர்வேலு மட்டும் தலைமறைவாக உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்
காதலை தட்டிக்கேட்டதால் கொலை
மேஜர் ஆகாத 14 வயது பெண்ணை காதலித்தது மட்டும் இல்லாமல் மாவட்டச் செயலாளரின் அண்ணனை கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.