மன்மோகனிடம் இருந்தது கொலைகாரன் கத்தி;மோடியிடம் இருப்பது டாக்டர் கத்தி: பொன்னார் புது விளக்கம்!
சென்னை: ஈழத் தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நரேந்திர மோடி வரும் 26ந் தேதி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொஅர்பாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் நலனை விட்டுக்கொடுக்கும் வகையில் பாஜக நடந்து கொள்ளாது. தமிழர் நலன் கருதியே ராஜபக்சேவுக்கு பா.ஜ.க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பை சேர்ந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனை விட்டுக் கொடுக்கும் வகையில் பா.ஜ.க நடந்து கொள்ளாது. இலங்கை தமிழர்கள் சமஉரிமையுடன் வாழ தொடக்கமே இந்த முடிவு.
ராஜபக்சேவை காங்கிரஸ் அழைத்ததிலும், பா.ஜ.க அழைப்பதிலும் வித்தியாசம் உண்டு. ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்சே கையில் இருக்கிறது.
அழிவை ஏற்படுத்திய ராஜபக்சேவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு. அதனால் அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம். இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.